மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவல்? பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிர சோதனை
பதன்கோட் விமானப் படை தளத்திற்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ராணுவ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பதான்கோட்: பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம நபர்கள் நுழைத்துள்ளதாக உளவுத்துறையின் தகவலை தொடர்ந்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் விமானப்படை தளத்தை சுற்றி 4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படை தளம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவினர். தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் தீரமுடன் பதிலடி கொடுத்து, 6 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இருப்பினும், இந்த தாக்குதலின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர்.