பதான்கோட் தாக்குதல்: 8 முறை பாகிஸ்தானுக்கு போன் செய்த டாக்சி டிரைவர்- விசாரணை தீவிரம்
பதான்கோட்: பதான்கோட் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் டாக்ஸி டிரைவரின் செல்போனில் இருந்து பாகிஸ்தானிற்கு 8 அழைப்புகள் சென்றது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ந்தேதி முதல் 4 நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.
தற்போது சண்டை முடிந்ததாக அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பதான்கோட் விமானத் தளத்திற்குள் தீவிரவாதிகள் நுழைய உதவியர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கால் டாக்ஸி...
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் முதலில் ஒரு கால் டாக்ஸி யில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களை சமூக விரோதிகள் எனக் கண்டறிந்து டாக்ஸி டிரைவர் அவர்களோடு போராடியதாகக் கூறப்பட்டது. இதில் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்கிய கார், அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி சேதமடைந்தது. பின்னர் கால் டாக்ஸி டிரைவரை தீவிரவாதிகள் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளனர்.
கார் கடத்தல்...
அதனைத் தொடர்ந்து போலீஸ் எஸ்.பி. சல்விந்தர் சிங் காரை வழிமறித்து கடத்தியுள்ளனர். அதில் ‘சைரன்' இருந்துள்ளது. இதனால் போலீஸ் சோதனை சாவடிகளில் தீவிரவாதிகள் எவ்வித சோதனையும் இன்றி எளிதாகக் கடந்து சென்றுள்ளனர்.
காலதாமதம்...
இந்தக் கடத்தல் குறித்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு எஸ்.பி. சல்விந்தர் சிங் சற்று தாமதமாகவே தகவல் தெரிவித்துள்ளார். மேலும் முன்னுக்குப் பின் முரணாகவும் அவர் பேசியுள்ளார். இதனால் தீவிரவாதிகளை பின்தொடர்வதில் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேகம்...
இதனால், பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு, சல்விந்தர் சிங் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட டாக்ஸி டிரைவர் மீதும் அவர்களுக்கு சந்தேகம் உள்ளது.
பாகிஸ்தான் அழைப்பு...
காரணம், சம்பவத்தன்று ராவி ஆற்றங்கரையில் கட்லா பாலம் அருகே டாக்ஸி டிரைவர் இகாகர் சிங்கின் உடல் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இகாகருக்கு பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும், பதிலுக்கு அவர் இங்கிருந்து பாகிஸ்தானிற்கு அழைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8 அழைப்புகள்...
இகாகரின் தொலைபேசியில் இருந்து இதுவரை 8 தொலைபேசி அழைப்புகள் பாகிஸ்தானிற்கு சென்றுள்ளதை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர். அவை அனைத்தும் அரை மணி நேர இடைவெளியில் இகாகரின் தொலைபேசிக்கு வந்துள்ளன.
அவசர அழைப்பு...
இதற்கிடையே இகாகரின் குடும்பத்தாரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தன்று நள்ளிரவில் இகாகர் போன் அழைப்பைத் தொடர்ந்து அவசரமாக வெளியே கிளம்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். அப்போது மருத்துவமனை உதவிக்காக அவசரமாக வெளியே செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்...
ஆனால், முதற்கட்ட விசாரணையில் இகாகர் கூறியது பொய் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் இந்தியாவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகளைத் தான் அழைத்துச் செல்ல சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணை...
ஆனபோதும் தீவிரவாதிகள் என்றே தெரிந்து தான் அவர்களை அழைத்துச் செல்ல இகாகர் சென்றாரா அல்லது மற்ற பயணிகள் போல் நினைத்துச் சென்றாரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தொடர்ந்து இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய புலனாய்வு அமைப்பினர்...
தற்போது தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் இந்தியா-பாக் எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.