நள்ளிரவில் உளவு பார்த்து நச்சென எச்சரித்த உளவுத்துறை! தீவிரவாத தாக்குதலை தவிடுபொடியாக்கிய பின்னணி
டெல்லி: உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கைவிடுத்திருந்ததால், பஞ்சாப்பின் பதன்கோட்டில் இன்று நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் எளிதில் முறியடிக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.
பதன்கோட்டில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலை இந்திய பாதுகாப்பு படையினர் முறியடித்து, தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று விரட்டியடித்தனர்.
பஞ்சாப்பில் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை சமீபத்தில், எச்சரிக்கை கொடுத்திருந்தது. இதனால், பஞ்சாப்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, உளவுத்துறை சரியாக செயல்படாமல் இருந்திருந்தால், மும்பை பாணியில் இந்த தீவிரவாத தாக்குதல் பெரிய அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது.
ஏனெனில், தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் புகுந்தது, நடத்திய தாக்குதல் போன்றவை யதேர்ச்சையாக நடைபெற்ற தாக்குதல் இல்லை. நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய ஐ.பி.க்கு கிடைத்த உளவுத்தகவல் இதன்மூலம் உறுதிப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 12.45 மணி முதல் 1.30 மணிக்குள், தீவிரவாதிகள், தங்களது பாகிஸ்தான் எஜமான குரூப்புடன் பேசிய தொலைதொடர்பு உரையாடல்களை இந்திய உளவுத்துறை இடைமறித்து பதிவு செய்துள்ளது. இதையடுத்துதான், பஞ்சாப் மற்றும், காஷ்மீருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
எச்சரிக்கையை தொடர்ந்தே, பதன்கோட் விமான நிலையத்தில், ராணுவத்தினர் கூடுதல் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர். தேசிய பாதுகாப்பு படையினரும், அந்த விமான நிலையத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
இத்தனை ஏற்பாடுகளை செய்து எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள பாதுகாப்பு படையினர் தயாராக இருந்ததன் விளைவே, எளிதாக தீவிரவாதிகள் அடித்து நொறுக்கப்பட காரணம். மேலும், தீவிரவாதிகள் முதலில் ஏர்போர்ட் டெக்னிக்கல் ஏரியாவிற்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், முன்கூட்டியே பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப்பட்டிருந்ததால், தீவிரவாதிகள் அதற்குள் நுழைய முடியவில்லை. அல்லது, விளைவுகள் மோசமாக இருந்திருக்க வாய்ப்பு இருந்தது என கூறுகிறார்கள் பாதுகாப்பு படையினர்.