வீல்சேர் கொடுக்க அரசு மருத்துவமனையில் லஞ்சம்: பணம் இல்லாத நோயாளி விளையாட்டு சைக்கிளில் சென்ற அவலம்!
ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் ரூ.150 லஞ்சம் கொடுக்க முடியாத நோயாளிக்கு குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு சைக்கிளை கொடுத்த சம்பவம் தெரியவந்து உள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு லஞ்சம் தராத நோயாளி ஒருவருக்கு வீல் சேர் அளிக்காமல் சிறுவர்கள் பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிளில் செல்ல கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பயன்படுத்த வீல் சேர் வசதி உள்ளது. ஆனால் ரூ.150 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அந்த வசதி கிடைக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு 40 வயதான ஒருவர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு நடக்க முடியாத நிலையில், மருத்துவமனையில் உள்ள சக்கர நாற்காலியை வழங்க கேட்டிருக்கிறார். ஆனால், மருத்துவமனை ஊழியர் ரூ.150 லஞ்சம் கொடுத்தால் தான் சக்கர நாற்காலி கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
#WATCH Patient forced to use child’s tricycle to reach doctor’s ward at Govt Hospital in Hyderabad as he couldn't pay alleged bribe of Rs150 pic.twitter.com/6P0v3KnG1v
— ANI (@ANI_news) March 17, 2017
பணம் இல்லாத நிலையில், அவருக்கு சக்கர நாற்காலி அளிக்காமல் குழந்தைகள் பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டிச்செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.