பெஷாவர் மாதிரியான மிருகத்தனத்தை பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை: பாதுகாப்பு ஆலோசகர்
டெல்லி: மக்கள் இப்படி மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொள்வதை நான் இதுவரை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை என பெஷாவர் பள்ளி தாக்குதல் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் இது போன்று மனிதத்தன்மை இல்லாமல் கொடூரமாக நடந்து கொள்ள முடியும் என்பதை இதுவரை நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. விலங்குகள் போன்று நடந்து கொண்டுள்ளனர். கீழ்த்தரமாக அப்பாவி பள்ளிக் குழந்தைகளை கொன்றுள்ளனர். இது நம் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன்.
இந்த சம்பவத்தில் இருந்து இந்தியா என்ன பாடம் கற்றுக் கொண்டது என்ன என்ற கேள்விக்கே இடமில்லை. இது போன்ற சம்பவங்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றார்.
பெஷாவர் சம்பவம் பற்றி பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம் தொலைபேசி மூலம் பேசி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.