அரசு விழாக்களில் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கனுமாம்... அடங்க மறுக்கும் பீட்டா!
டெல்லி: அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளில் அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு விலங்குகள் நல அமைப்பு எனப்படும் பீட்டா அமைப்பானது பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பீட்டா அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் அதன் சுற்றுச்சுழல் துறை அமைச்சர், அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அசைவ உணவை பரிமாற தடை விதித்தார். அதுபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தடை விதிக்க வேண்டும்.
மாமிச உற்பத்தி என்பது நாடு முழுவதும் வறட்சிக்கும், அதிக வெப்பத்துக்கும் வழி வகுக்கும். பிரதமர் மோடி தலைமையில் ஒட்டுமொத்த இந்திய அரசும் சுற்றுச்சூழலை பாதுகாக்க விலங்குகளின் மாமிசங்களை உண்ணுவதில் இருந்து புறக்கணிப்பதற்கான தருணம் இது.
காலநிலை மாற்ற பிரச்சினைக்கும், பசுமை இல்ல வாயுவை கட்டுபடுத்துவதிலும் இந்த நடவடிக்கை உதவும். இந்த உத்தரவு மூலம் ஆரோக்கியமான சுற்றுச்சுழலுக்கு பிரதமர் மோடி முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் பீட்டா வலியுறுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தமிழகமே பீட்டாவுக்கு எதிராக கொந்தளித்து புரட்சியில் இறங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.