இப்போவே டேங்க ஃபில் பண்ணுங்கோ.. இரு வாரங்களில் எகிறப்போகிறது பெட்ரோல், டீசல் விலை!
டெல்லி: இன்னும் இரு வாரங்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் எகிறப்போவதாக எச்சரிக்கிறது சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரம்.
சர்வதேச கச்சா எண்ணை விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாதம் இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து வந்ததால் இநதியாவிலும் பெட்ரோல், டீசல் விலை மளமளவென குறைந்தது.
ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.50 வரையிலும், டீசல் விலை ரூ.9 என்ற அளவிலும் குறைந்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து மகிழ்ச்சியடைய முடியாத சூழ்நிலை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 24 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதை 'ஒபெக்' அமைப்பும் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் எண்ணை விலையை நிர்ணயிக்கும் ஆலோசனை கூட்டம், செப்டம்பர் நடுவில் நடைபெற உள்ளது. அப்போது பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயரும் என்று தெரிகிறது.
இந்த காலகட்டத்தில், பணத்தின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணை விலைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் கண்டிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயருவது உறுதி என்கிறது சந்தை நிலவரம்.