பெட்ரோல், டீசல் விலை 'லைட்டா' குறைப்பு! இன்று நள்ளிரவு முதல் அமல்!!
டெல்லி: பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 49 பைசா மற்றும் ரூ1.21 விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை நிர்ணயம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டன. இந்த ஆலோசனையின் முடிவில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும்; டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைப்பதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இப் புதிய விலை நிர்ணயம் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. கடைசியாக கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 அதிகரிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்து வருவதாக சுட்டிக் காட்டி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி, 28-ம் தேதிகளில் பெட்ரோல் டீசல் விலை அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.59.85-க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் இனி ரூ59.36க்கு விற்கப்படும். ரூ.49.58-க்கு விற்கப்படும் டீசல் விலை இனி ரூ48.37க்கு விற்பனை செய்யப்படும்.