துரத்திய ஆபாச எஸ்.எம்.எஸ்கள்… தூக்கு போட்டு செத்துப்போன பி.பார்ம் மாணவி
மைசூரு: ஆபாச எஸ்.எம்.எஸ்கள் விடாமல் என்னை விடமல் துரத்துகின்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதிவைத்துவிட்டு பி.பார்ம் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியின் பெயர் சுவாதி, வயது 22. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் இவர், மைசூரு பன்னிமண்டபாவில் உள்ள ஜே.எஸ்.எஸ். மடத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் ‘பி‘ பார்மசி 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்து வந்தார்.
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று காலையில் நீண்ட நேரம் ஆன போதிலும் சுவாதி தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சகமாணவிகள், சுவாதி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். சுவாதி தனது அறையில் இருந்த ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தார்.
உடனடியாக மாணவிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்னதாக சுவாதி எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், "எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்த கல்லூரியிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் என்னால் அனுசரித்து செல்ல முடியவில்லை. எனது செல்போனுக்கு தினமும் புதிய புதிய செல்போன் எண்களில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். வருகின்றன. இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி மற்றும் தோழிகள் என்னை மன்னித்துவிடுங்கள். எனது முடிவு மூலம் உங்களுக்கு பெரிய துயரத்தை கொடுத்துவிட்டு செல்கிறேன்" கூறப்பட்டிருந்தது. செல்போனுக்கு வந்த ஒரு ஆபாச எம்.எம்.எஸ் மாணவியின் உயிரைக் குடித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.