பிரபல ஷோரூமில் பெண்கள் உடைமாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்த மேனேஜர்
டெல்லி: டெல்லியில் உள்ள வான்ஹ்யூசன் ஷோரூமில் இருக்கும் உடைமாற்றும் அறையில் பெண்களை வீடியோ எடுத்த மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள லாஜ்பத் நகரில் வான்ஹ்யூசன் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. அந்த ஷோரூமிற்கு எம்.என்.சி.யில் பணிபுரியும் 23 வயது பெண் திங்கட்கிழமை சென்றுள்ளார். அங்கு அவர் உடைமாற்றும் அறைக்கு சென்று தான் வாங்கிய ஆடையை போட்டு பார்க்க முயன்றார்.
ஆடையை மாற்றும் முன்பு அவர் அந்த அறையில் கேமரா ஏதாவது உள்ளதா என்று சோதித்துள்ளார். அப்போது அறையின் ஒரு பகுதியில் செல்போன் ஒன்று இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் வீடியோ ஆன் ஆகி அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையின் மேனேஜர் புல்கித் சன்வாலை கைது செய்தனர். மேலும் உடை மாற்றும் அறையில் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான சன்வால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் வான்ஹ்யூசன் ஷோரூமில் மேனேஜராக சேர்ந்துள்ளார். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் அந்த வீடியோக்களை தான் மட்டும் பார்த்தாரா இல்லை இணையதளங்களுக்கு அளித்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.