குஜராத்தில் சிக்கிய "சிப்" பொருத்திய புறா: பாக். "உளவாளியா" அல்லது ரேஸ் புறாவா?
பெங்களூரு: குஜராத் மாநிலத்தில், இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சிப் பொருத்தப்பட்ட ஒரு புறா சிக்கியது. இது பாகிஸ்தானிலிருந்து உளவு பார்க்க அனுப்பப்பட்ட புறாவா அல்லது ரேஸ் புறாவா என்று விசாரணை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக உளவுத்துறையினர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணையின்படி இந்த புறா ஏதாவது ரேஸில் பங்கேற்றிருக்கலாம் என்றும் தண்ணீர் தேடி குஜராத் மாநிலம் சலாய் எஸ்ஸார் ஜெட்டி பகுதிக்கு அது வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்த வகை புறாக்கள், ரேஸ்களில் அதிகம் பயன்படுத்தப்படும். ரேஸின்போது அவை எங்கு பறந்து கொண்டுள்ளன என்பது குறித்து அறிவதற்காக அவற்றின் உடலில் சிப் பொருத்துவது வழக்கமாம்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்:
பாகிஸ்தானிலிருந்து குஜராத் கடல் பகுதிக்குள் பிரவேசித்த பாகிஸ்தான் தீவிரவாத படகு இன்னும் பாதுகாப்புத்துறையினரின் மனதிலிருந்து அகலவில்லை என்பதால் இந்த சிப் புறா சற்று ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்த புறாவின் காலில் சிப் கட்டப்பட்டிருந்தது. மேலும் அதன் இறவில் சில வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன. அந்த காலில் இறுந்த சிப்பில் 28733 என்ற எண் இடம் பெற்றிருந்தது. மேலும் ராசுல் உல் அல்லா என்ற வார்த்தையும் அதில் இருந்தது.
மார்ச் 20ம் தேதி இந்த புறா சிக்கியது.
இந்த புறாவின் பின்னணி பலவாக இருக்கலாம். இது ரேஸ் புறா என்பது கிட்டத்தட்ட தெளிவாகியுள்ளது. இந்த வகை புறாக்களுக்கு அரபு நாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது.
சிப் கூட புறாவின் பாதையை அறிந்து கொள்ள வைத்த சிப்தானாம். அதன் மேல் இருந்த பெயர் அந்த புறாவின் பெயராக இருக்கக் கூடும் என்கிறது உளவுத்துறை. தற்போது இந்த வழக்கை வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.