இந்திய விமானப்படை துணை தளபதியாக பொறுப்பேற்ற கார்கில் ஹீரோ
டெல்லி: கார்கில் போரின்போது போர்விமானங்களை இயக்கிய விமானி ஏர் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா இந்திய விமானப்படையின் துணை தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
விமானப்படையில் 37 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஏர் மார்ஷல் பிரேந்தர் சிங் அடுத்த ஆண்டு விமானப்படை தளபதியாகலாம் என்று கூறப்படுகிறது. 1978ம் ஆண்டு பிரேந்தர் விமானப்படையில் போர்விமான பைலட்டாக சேர்ந்தார். அவர் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, தேசிய பாதுகாப்பு அகாடமி, வெல்லிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் ஸ்டாஃப் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.
கார்கில் போரின்போது இரவு நேரங்களில் போர்விமானங்களை இயக்கி நம் ராணுவத்தின் கையோங்க வழிவகை செய்ததன் மூலம் பிரபலம் ஆனவர் பிரேந்தர். கார்கில் போரின்போது விமானப்படை தளபதி டிப்னிஸுக்கு ஆபத்து எதுவும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டவர்.
விமானப்படையில் பல சாதனைகளை புரிந்த பிரேந்தருக்கு யுத் சேவா பதக்கம், வாயுசேனா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதன் பிறகு அவருக்கு இந்த ஆண்டு அதி விசிஷ்ட் சேவா பத்தக்கம் வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவித்தார். பிரேந்தர் விமானப்படையின் முக்கிய ஆபரேஷன்களில் பங்கு கொண்டு சிறப்பாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.