கேரளாவில் பா.ஜ.க. கால்பதிக்க ஆளும் காங். முதல்வர் உம்மன்சாண்டி ஆதரவு- பிணராய் விஜய் குற்றச்சாட்டு
கோழிக்கோடு: கேரளாவில் ஈழவா சமூகத்தின் எஸ்.என்.டி.பி.- பா.ஜ.க. கூட்டணிக்கு ஆளும் காங்கிரஸ் முதல்வர் உம்மன்சாண்டி மறைமுக ஆதரவளிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிணராய் விஜயன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஈழவா சமூகத்தின் ஸ்ரீ நாரயண தர்ம பரிபாலன யோகம் என்ற எஸ்.என்.டி.பி. யோகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 3வது அணியாக களமிறங்க உள்ளது. இது கேரளா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
ஈழவா சமூகத்தினர் பெரும்பகுதியானோர் இடதுசாரி ஆதரவாளர்கள். இதனால் இடதுசாரிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். இந்நிலையில் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிணராய் விஜயன் இது தொடர்பாக கூறியதாவது:
பா.ஜ.க.- எஸ்.என்.டி.பி. கூட்டணி உருவாவது என்பது கேரளாவில் மதநல்லிணக்கத்தை அழித்துவிடும். கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கால்பதிப்பதற்கு உம்மன்சாண்டிகள் மறைமுகமாக உதவுகிறார்கள்.
கேரளாவில் தற்போது உருவாகியுள்ள புதிய அரசியல் சூழலானது ஆர்.எஸ்.எஸ்.- உம்மன்சாண்டி- வெள்ளாப்பள்ளி நடேசன் (எஸ்.என்.டி.பி) ஆகியோர் இணைந்து உருவாக்கியதாகும். ஆளும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை வெள்ளாப்பள்ளி நடேசனுக்கு எதிராக செயல்படக் கூடாது என உம்மன்சாண்டி தடுத்திருக்கிறார்.
இத்தனைக்கும் கேரளா மாநில காங்கிரஸ் தலைவரான ஈழவா சமூகத்தைச் சேர்ந்த சுதீரனை வெள்ளாப்பள்ளி நடேசன் அவமதித்த போது அதுபற்றி கூட உம்மன்சாண்டி பேசவில்லை.
இவ்வாறு பிணராய் விஜயன் கூறினார்.