கேரள முதல்வராக பினராய் விஜயன் இன்று பதவியேற்பு !
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற இடது ஜனநாயக முன்னணி கட்சி ஆட்சி அமைக்கிறது. முதல்வராக பினராய் விஜயன் இன்று பதவியேற்க உள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணி மொத்தம் உள்ள 140-ல் இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
முதல்வர் பதவியில் அமரப் போவது யார் என்பதில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்கள் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும், பினராய் விஜயனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் கட்சியின் மாநில குழு பினராய் விஜயனை தேர்வு செய்தது.
இதையடுத்து பினராய் விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு இன்று பொறுப்பேற்கிறது. புதிய அமைச்சரவையில் மொத்தம் 19 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 4 மணியளவில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 12 அமைச்சர்களும், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 5 அமைச்சர்களும், கூட்டணி கட்சிகளான ஜனதாதளம் (எஸ்)-1, என்.சி.பி. (காங்.)-1 ஆகியோருக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. ஆளுநர் சதாசிவம் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்நிலையில் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசாகும். இந்த அரசில் சாதி, மத, அரசியல் வேறுபாடின்றி அனைவருக்கும் உரிமை இருக்கும். கேரளாவின் வளர்ச்சி மட்டுமே புதிய அரசின் குறிக்கோளாகும்.
இடது முன்னணி அரசுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. நான் முதல்வர் ஆன பிறகு, என்னுடைய ஆள் என்று கூறி சிலர் நடமாடுவார்கள். இப்படி கூறுவதே ஒரு வகையில் ஊழல்தான். எனவே அப்படிப்பட்டவர்களிடம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்