கெனான் சட்டங்களை கிறிஸ்தவ தனிநபர் சட்டமாக அறிவிக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கெனான் சட்டங்களை கிறிஸ்தவர்களுக்கான தனிநபர் சட்டமாக அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
கர்நாடகா கத்தோலிக்க சங்கத்தின் முன்னாள் தலைவர் கிளாரன்ஸ் பயஸ் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், முஸ்லிம் சட்டங்களை அரசுகளும் நீதிமன்றங்களும் ஏற்று முஸ்லிம் தனிநபர் சட்டமாக அந்தஸ்து அளித்துள்ளன.
அதேபோல் கெனான் சட்டங்களையே கிறிஸ்தவர்களுக்கான தனிநபர் சட்டமாக அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனில் தவே மற்றும் கோயல் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது, முஸ்லிம்கள் தங்களது சட்டங்களின்படி மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்து பெற்றுக் கொள்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இருக்கிறது.
ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்துக்கான கெனான் சட்டங்களின் படி விவாகரத்துக்குப் பின்னர் மறுதிருமணம் செய்து கொள்கின்றனர்; ஆனால் நீதிமன்றங்களில் இது இருதார மணமாக பார்க்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கான சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு தனிநபர் சட்டமாக கருதப்படுகிற போது கிறிஸ்துவர்களுக்கான கெனான் சட்டங்கள் என்பவற்றை கிறிஸ்தவர்களின் தனிநபர் சட்டமான ஏன் அங்கீகரித்து சட்ட அந்தஸ்து தர இயலாது?
ஆகையால் கெனான் சட்டங்களை கிறிஸ்தவர் தனிநபர் சட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.