அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகள் குறித்து திட்டமிட இப்பவே சிறப்புக்குழுவை அறிவித்தார் மோடி !
டெல்லி: அடுத்த மூன்று ஒலிம்பிக் தொடர்களுக்கான தயாரிப்புகளைத் திட்டமிட சிறப்புக்குழு அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று இரவு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, 2020, 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நடைபெற உள்ள மூன்று ஒலிம்பிக் தொடர்களுக்கான இந்தியாவின் தயாரிப்புகளைத் திட்டமிடுவதற்கான சிறப்புக்குழு அடுத்த சில நாட்களில் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சிறப்புக் குழுவில் விளையாட்டுத்துறை வல்லுநர்களுடன் பிற துறைகளைச் சார்ந்த வல்லுநர்களும் இடம்பெறுவார்கள். விளையாட்டுகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசிதிகளை உருவாக்குதல், வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்தல் மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வீரர் வீராங்கனைகள் தேர்வு உள்ளிட்டவை தொடர்பான செயல் திட்டங்களை இந்த சிறப்புக்குழு நிர்ணயம் செய்யும்.
வீரர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளில் ஏற்படும் பிரச்சனைகள், மற்றும் அக்கறையின்மை குறித்த புகார்களுக்கு அந்தந்த விளையாட்டுகளுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் பதிலளிக்க வேண்டியது கட்டயமாக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடத்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். ஆனால் இந்தியா இரண்டு பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால், அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக்கணக்கை உயர்த்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.