வெள்ள சேதம்... தமிழகத்துத்து துணை நிற்போம்! - பிரதமர் மோடி
டெல்லி: வெள்ளச் சேதத்தில் இருந்து தமிழகத்தை மீட்க மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடி, மாதம்தோறும் 'மனதில் இருந்து' (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
பாரீஸில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பு ஞாயிற்றுக்கிழமை அவர் வானொலியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
"புவி வெப்பமயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளைத் தடுப்பது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது இயற்கைப் பேரிடர் தொடர்பாக செய்திகள் அதிகம் வருகின்றன. இவை, நாம் கற்பனை செய்துகூட பார்த்திராத வகையில் உள்ளன. இதற்குப் பருவநிலை மாற்றப் பிரச்னைதான் முக்கியக் காரணம்.
தமிழகத்துக்கு துணை: சமீபத்தில் கூட சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பருநிலை மாற்றத்தால் இதுபோன்ற பிரச்னைகள் எழும்.
மழை பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டுவர மாநில அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
மத்தியக் குழு தமிழகத்துக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டு வருகிறது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தமிழகம் விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் எதிர்பாராத கனமழையால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட இடங்களில் எப்போதும் இல்லாத வகையில் வெப்பம் அதிகரித்து பயிர்கள் கருகிவிடும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் இப்போது உலகமே கவலையடைந்து வருகிறது. உலகின் வெப்பநிலை இதற்கு மேலும் அதிகரிக்கக் கூடாது. அதற்கு நாம் ஒவ்வொரு வரும் நமது பங்கைச் செலுத்த வேண்டும்," என்றார்.