இந்தியாவில் 'நம்பர் ஒன்' கட்சி பாஜக... கேரளாவில் மோடி பெருமிதம் ! #kerala
திருவனந்தபுரம்: இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்ந்து வருவதாக கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாஜக தேசிய நிர்வாக குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: சிறப்பான வரவேற்பு அளித்த பா.ஜ.க, தொண்டர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கேரள மக்கள் நாடுமுழுவதும் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.
கேரளாவை நினைத்தாலே அது கடவுளின் நாடு என்பதுதான் நினைவுக்கு வரும். கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து விழா மேடை வரையில் திரண்டிருந்த மக்களைக் கண்டு வியப்படைந்தேன்.
வளைகுடா நாடுகளில் கேரள மக்களின் பங்கு மதிக்கதக்கதாக உள்ளது. அங்கு பணிபுரிபவர்களில் கேரள மக்களே அதிகம். அவர்களை அங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரள மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்.
ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் உயர்வில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. நான் தேர்தல் அரசியலில் நுழையும் முன் பா.ஜ.க,வில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். கட்சி தொண்டர்களின் கடின உழைப்பும் தியாகமும் ஒருபோதும் வீணாகிவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.