மோடியின் வங்கதேச பயணத்தில் முக்கியத்துவம் பிடிக்கும் "பயங்கரவாத ஒழிப்பு"
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்தில் "பயங்கரவாத ஒழிப்பு" முக்கிய அம்சமாக இருக்கும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச சுற்றுப்பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தயாராகிக் கொண்டிருக்கிறார்..இந்த பயணத்தின் போது எல்லை பிரச்சனைகள், பயங்கரவாத ஒழிப்பு ஆகியவைதான் முதன்மையான விவகாரங்களாக இருக்கும்...
மேற்கு வங்கத்தில் புர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவமானது இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறது. ஏற்கெனவே அல்கொய்தா- ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஏஜெண்டுகள் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவை தாக்க இலக்கு வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கதேசம் மற்றும் ஐ.எஸ்.ஐ. இடையேயான உறவும் நெருக்கமாக இருந்து வருகிறது. இந்த விவகாரங்களும் மோடியின் பயணத்தின் போது விவாதிக்கப்படும்.
இருநாடுகளும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பானது இந்திய இளைஞர்களை தங்களது தீவிரவாத அமைப்பில் சேர்ப்பது குறித்து வங்கதேசத்திடம் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அதேபோல் ஜமாத் உல் முஜாஹிதீனின் கிளை அமைப்பாக இருக்கும் அன்சர் உல் பங்களாவின் நாசவேலை சதித்திட்டங்கள் குறித்தும் வங்கதேச தலைவர்களுடன் பிரதமர் விவாதிக்க இருக்கிறார்.
இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சட்டவிரோதமாக வங்கதேசத்தவர் குடியேறுவதும் மோடியின் வங்கதேச பயணத்தில் முதன்மையான பிரச்சனையாக விவாதிக்கப்பட இருக்கிறது.