உலகின் உயரமான போர்க் களத்தில், உறைய வைக்கும் குளிரில் தீபாவளி கொண்டாடிய மோடி
ஸ்ரீநகர்: உலகின் உயரமான போர்க்களத்தில், இந்திய ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்காக மேலும் ரூ.745 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தார்.
இந்திய ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் காஷ்மீரிலுள்ள சியாச்சின் ராணுவ முகாமில் தீபாவளி கொண்டாட முடிவு செய்த மோடி, நேற்று சியாச்சின் சென்றார். 5400 மீட்டர் உயரத்தில் உள்ளதால் சியாச்சினை உலகின் உயரமான போர்க்களம் என்று வர்ணிப்பது வழக்கம். அங்கு மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டி வருகிறது.
இந்நிலையில் உல்லன் ஆடைகள், பனி கண்ணாடி உள்ளிட்ட பல ஆயத்தங்களுடன் மோடி அங்கு விசிட் செய்து ராணுவத்தினருடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். அங்கு உறையும் பனிச் சூழலுக்கு நடுவே ராணுவ தளத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களைக் கூறி, தீபாவளி பரிசு பொருட்களை பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சியாச்சின் பயணம் மற்றும் ராணுவ வீரர்களுடனான சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கலந்துக் கொள்ளவில்லை. ராணுவ தளத்தில் வீரர்களுக்கு நடுவே ஹிந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் சேவகனாக இருக்க நான் மிகவும் பெருமை அடைகிறேன். இங்கு வீரர்கள் வாழும் சூழல் கண்கூடாக தெரிகிறது. நாட்டுக்காக இங்கு இக்காட்டான சூழலில் வாழும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது குடும்பத்தினரும் பெருமிதத்தின் உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டியவர்கள்.
சியாச்சின் நிலவும் காலநிலை அனைவரும் அறிந்ததே. 1984ல் இங்கு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் சுமார் 2000 பேர் உயிர்நீத்தனர். இதில் பெரும்பாலானோர் மோசமான காலநிலையால் உயிரிழந்தவர்கள்தான். ஆனால், இங்கிருக்கும் கடுமையான மற்றும் மோசமான குளிரையும் பொருட்படுத்தாமல் நாட்டை காக்கும் பணியில் திறமையுடன் செயல்பட்டு, முன்னின்று செயல்படும் வீரரகள், உண்மையில் நம்மை உலக அளவில் பெருமையடையச் செய்கின்றனர்" என்றார் மோடி.
இதன்பிறகு ஸ்ரீநகர் திரும்பிய மோடி, காஷ்மீரில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக, அந்த மாநிலத்துக்கு ரூ.740 கோடி அளவில் நிவாரண நிதியுதவியை அறிவித்தார். மோடியின் வருகையை கண்டித்து காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடையடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்ததால், தலைநகர் ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.