ஜிஎஸ்டிக்கு புது விளக்கம் சொன்ன மோடி!
நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டிக்கு புதிய விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறுவதற்காக ஜிஎஸ்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்காக நள்ளிரவில் நடந்த அறிமுக கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புயலைக் கிளப்பும் என்பது உறுதியான விஷயம்.
இந்நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த கூட்டத்தொடர் சுமூகமான முறையில் நடைபெற வேண்டும் என்றார். ஜிஎஸ்டியின் நோக்கமே (growing stronger together) பலத்தை வளர்ப்பதற்கான ஒற்றுமை என்று கூறியுள்ளார். இதே நம்பிக்கை நடப்பு கூட்டத் தொடரிலும் பிரதிபலிக்கும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் பருவநிலை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் நல்ல சாகுபதி செய்ய வேண்டும் என்று நம்புவதாகவும், பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். நேற்றைய தினம் மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் போதும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.