என் திட்டங்களை எல்லாம் மோடி காப்பியடிக்கிறார்: முலாயம் சிங் யாதவ் குற்றச்சாட்டு
லக்னோ: பிரதமர் மோடி கிராமங்களை தத்தெடுப்பது, கழிவறைகளை கட்டுவது ஆகிய திட்டங்களை என்னிடம் இருந்து காப்பியடித்துள்ளார் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
மோடி கிராமங்களை தத்தெடுப்பது பற்றி பேசுகிறார். நான் 1990ம் ஆண்டிலேயே கிராமங்களை தத்தெடுத்தேன். பிரதமர் என்னை காப்பியடிக்கிறார். இதை எல்லாம் நான் ஏற்கனவே செய்துவிட்டேன். 1990ம் ஆண்டிலேயே நான் கழிவறைகளை கட்ட ஊக்குவித்தேன். குப்பையை அகற்றுவதை பற்றி பேசுகிறீர்கள். முதலில் வறுமையை ஒழியுங்கள். குப்பை தானாக மறையும்.
பிரதமர் தற்போது பேசுவதை எல்லாம் நான் எப்பொழுதோ செய்துவிட்டேன். இது உங்களுக்கே தெரியும். சமாஜ்வாடி கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தலா 2 கிராமங்களை தத்தெடுத்து வேலை பார்த்தால் மாற்றம் ஏற்படும்.
மோடி பயணம் செய்வது நல்ல விஷயம். அண்டை நாட்டினருடனும், பிற நாட்டவர்களுடனும் நல்ல உறவு வைத்திருப்பது சிறந்தது என்றார்.