சபரிமலைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடி– அடுத்த மாதம் வர இருப்பதாக தகவல்!
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி அண்மையில் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் வளர்ச்சி பணிகள் குறித்து அவர் பிரதமரிடம் ஆலோசித்தார்.
சபரிமலை கோயிலை சர்வதேச புனித தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பிரதமரிடம் கேட்டு கொண்டார். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்ததாகவும், இதுகுறித்து ஆலோசிப்பதற்கு சபரிமலைக்கு நான் வருவதற்கு திட்டம் இருப்பதாகவும் முதல்வர் உம்மன்சாண்டியிடம் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி மண்டல பூஜை தொடங்கும் அடுத்த மாதம் சபரிமலைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லியில் இருந்து கேரள பாஜக மாநில தலைவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் பாஜகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. நவம்பர் இறுதியில் பிரதமர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.