மோடியின் பாஸ்போர்ட்.... மனைவி யசோதா பென் ஆர்டிஐ மூலம் கேள்வி
அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தபோது அவர் தமது திருமணம் தொடர்பாக அளித்த ஆவணங்கள் குறித்த விவரங்களை தனக்கு அளிக்கும்படி அவரது மனைவி யசோதா பென் அகமதாபாத் பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகத்திடம் நேற்று மனு அளித்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தலின் போதுதான் மோடி தமக்கு திருமணமாகிவிட்டதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மோடியின் மனைவி யசோதா பென் குறித்த விவரங்கள் வெளியாகி இருந்தன.
இதனைத் தொடர்ந்து தனது பாதுகாப்பு விவரங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை கேட்டு அவ்வப்போது யசோதா பென் சர்ச்சையை கிளப்பி வருகிறார். இந்நிலையில் அகமதாபாத் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று யசோதா பென் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், மோடியின் பாஸ்போர்ட்டில் திருமணம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதா? எனக் கோரியுள்ளார். இது குறித்து அகமதாபாத் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கான் கூறுகையில், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ், மோடியின் பாஸ்போர்ட்டில் திருமணம் குறித்த தகவல் உள்ளதா? என யசோதா பென் கோரியுள்ளார். அவருக்கான தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்றார்.
ஏற்கனவே தமது திருமண சான்றிதழையோ, மோடியை தாம் திருமணம் செய்து கொண்டதை நிரூபிப்பதற்கான உறுதிமொழி பத்திரத்தையோ யசோதா பென் சமர்ப்பிக்காததையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.