துணை ஜனாதிபதி தேர்தல்.. முதல்வர் எடப்பாடியிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு தரும்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி ஆதரவு கோரியுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து துணை குடியரசு தலைவர் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெங்கையா நாயுடுவுக்கு தொலைபேசி மூலம் ஆதரவு கோரி அனைத்துக்கட்சித் தலைவர்களிடமும் பிரதமர் மோடி பேசி வருகிறார். அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்திடம் முதலாவதாக பேசி ஆதரவு கேட்டார். பின்னர், துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுவை ஆதரிக்க உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசி ஆதரவு கேட்டுள்ளார். ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மோடி கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.