வெள்ளம் பாதிப்பு; மத்திய அரசு அனைத்து உதவிகளும் அளிக்கும்.. ஜெயலலிதாவிடம் பிரதமர் மோடி உறுதி !
டெல்லி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழைக்கு சென்னை மாநகரம் ஸ்தம்பித்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இந்தநிலையில், வெள்ள நிலவரம் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தொலைபேசி வழியாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்துள்ளதாக முதல்வர் தெரிவித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது:
Spoke to Jayalalithaa ji on the flood situation in parts of Tamil Nadu. Assured all possible support & cooperation in this unfortunate hour.
— Narendra Modi (@narendramodi) December 1, 2015
தொடர் மழையால் தமிழகம் அவதியுற்று வரும் துரதிருஷ்டவசமான இந்த நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் முழு ஒத்துழைப்பும் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.