ஜூலை 1ம் தேதி டிஜிட்டல் இந்தியா வாரத்தை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி
டெல்லி: ஜூலை மாதம் 1ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா வாரத்தை துவக்கி வைக்கிறார்.
தொழில்நுட்பத் துறையை ஊக்குவிக்கவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் டிஜிட்டல் இந்தியா வாரத்தை வரும் ஜுலை மாதம் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் வரும் 1ம் தேதி மாலை 4 மணிக்கு டிஜிட்டல் இந்தியா வாரம் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார் மோடி. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவது குறித்த தனது திட்டத்தை அந்த நிகழ்ச்சியில் மோடி தெரிவிக்க உள்ளார்.
ஒரு வாரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானி, டாடா நிறுவன தலைவர் சிரஸ் மிஸ்ட்ரி, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, விப்ரோவின் ஆசிம் பிரேம்ஜி உள்பட பல நிறுவன தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் பல தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு முதலீடு குறித்து பேச உள்ளனர். தொழில்நுட்பத் துறையில் பல தொழில் அதிபர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.