பட்டேலின் தட்டு, கப் அன்ட் சாசர் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு
டெல்லி: இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 139வது பிறந்தநாள் அன்று அவரது உடைமைகள் சில பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் 139வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.
பட்டேலுக்கு குஜராத்தில் ரூ.3,000 கோடி செலவில் பிரமாண்ட சிலை செய்யப்படுகிறது. இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா முடிந்தது. சிலையை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் கட்டுகிறது. பட்டேலின் பிறந்தநாளான இன்று அவர் பயன்படுத்திய தட்டுகள், கப், சாசர் உள்ளிட்டவற்றை டெல்லியில் உள்ள மஞ்சரி டிரஸ்டைச் சேர்ந்த ஷீலா கடாடே பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.
பட்டேலின் பொருட்களை அவரது பேரன் ஸ்ரீ பிபின் தஹ்யாபாய் பட்டேல் மற்றும் அவரது மனைவி லூய் ஆகியோர் ஷீலாவுக்கு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டேலின் பொருட்களை பெற்றுக் கொண்ட மோடி அவற்றை பத்திரமாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.