சுனந்தா கொலை வழக்கு: ராஷ்டிரிய லோக் தள் தலைவர் அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பான ராஷ்டிரிய லோக் தள் தலைவரான அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் இன்று தீவிர விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மர்ம சாவு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுனந்தா கொல்லப்பட்ட அன்று மாலை சில பத்திரிகையாளர்களுடன் போன் மூலம் பேசியுள்ளார். அந்த பத்திரிகையாளர்களிடம் புலனாய்வுக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் ஐ.பி.எல். விவகாரம் தொடர்பாகவோ, சசிதரூருக்கு பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தராருடன் உள்ள தொடர்பு குறித்தோ சுனந்தா ஏதேனும் கூறினாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
மெஹர் தராருடன் சசிதரூருக்கு தொடர்பு உள்ளதாக சுனந்தா சந்தேகப்பட்டதாகவும், சசிதரூருக்காக ஐ.பி.எல். விவகாரத்தில் ஏற்பட்ட தொல்லையை தான் ஏற்றுக்கொண்டதாகவும் சுனந்தா பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. அதே போல் கொல்லப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் தற்போதைய ராஷ்டிரிய லோக் தள் தலைவருமான அமர்சிங்கை தொடர்பு கொண்ட சுனந்தா ஐ.பி.எல். விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், சுனந்தா ஒரு முறை தம்மிடம் பேசியபோது, ஐ.பி.எல் விவகாரத்தில் என்மீது எந்த தவறும் இல்லை. அதில் சசிதரூர் செய்த முறைகேடுகளில் இருந்து நான்தான் அவரை காப்பாற்றினேன் என மிகுந்த கோபத்துடன் கூறினார். பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர் தரரை, துபாயில் சந்தித்தது தொடர்பாக சுனந்தாவும், சசிதரூரும் தன் முன்னிலையிலேயே கடுமையான வாக்குவாதம் நடந்தது என்றும் அமர்சிங் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே ஐ.பி.எல். விவகாரத்தில் புலனாய்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு அமர்சிங்கிடம் நடைபெறும் விசாரணையில் விடை கிடைக்கலாம் என்று போலீசார் எதிர்பார்த்து அவருக்கு சம்மன் அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் முன்பு அமர்சிங் இன்று ஆஜரானார்.
இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், சுனந்தா மற்றும் சசி தரூர் இடையேயான உறவு குறித்து தம்மிடம் போலீசார் கேள்விகள் கேட்டதாகத் தெரிவித்தார்.