ஜூன் 4ம் தேதி, ஸ்டிரைக்கில் குதிக்கும் 50 ஆயிரம் போலீசார்.. கலக்கத்தில் கர்நாடக அரசு
பெங்களூர்: பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் 'வேலை நிறுத்த' போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காவல்துறை கையில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கை மீறி அவர்கள் நடக்க அனுமதி கிடையாது. அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உடனடியாக பணியில் இருந்து நீக்க முடியும்.
எனவே, கர்நாடக கான்ஸ்டபிள்கள் நடத்தப்போகும் போராட்டம் நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
15 மணிநேர வேலை
தினமும் 15 மணி நேர வேலை, விடுமுறை மறுப்பு, கூடுதல் நேர பணிக்கு பணம் தராதது, குறைவான ஊதியம், அதிகாரிகள் நெருக்கடி போன்றவை இந்த போராட்டத்திற்கு காரணமாம்.
சம்பளம் வேறுபாடு
பக்கத்து மாநிலமான ஆந்திராவில், சப்-இன்ஸ்பெக்டருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கும் நிலையில், அதே ரேங்கிலுள்ள கர்நாடக போலீஸ்காரருக்கு கிடைப்பது ரூ.35 ஆயிரம்தான். இதுபோன்ற ஊதிய ஏற்றத்தாழ்வுகளை களைய மாநில அரசை பலமுறை கேட்டுக்கொண்டும், பலனில்லை.
குமுறல்
85 ஆயிரம் போலீசாரை கொண்ட கர்நாடக காவல்துறையில், சுமார் 60 ஆயிரம் பேர் கான்ஸ்டபிள்கள்தான். இவர்கள் கோரிக்கைகள் அரசுக்கு சென்று சேராத அளவுக்கு உயர் அதிகாரிகளின் அடக்குமுறை இருப்பதாக குமுறுகிறார்கள் கான்ஸ்டபிள்கள்.
அரை லட்சம் போலீசார்
இந்நிலையில்தான் சுமார் 50 ஆயிரம் கான்ஸ்டபிள்கள் ஜூன் 4ம் தேதி மொத்தமாக விடுமுறை எடுக்க உள்ளனராம். இந்த போராட்டத்தை 'அகில கர்நாடக போலீஸ் மகா சங்கா' என்ற அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.
கலக்கத்தில் கர்நாடக அரசு
நாட்டில் எங்குமே இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறாத நிலையில், கர்நாடக அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனைத்து வகை நடவடிக்கைகளையும் எடுத்து போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர கதியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.