தென் மாநில வனப் பகுதிக்குள் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஊடுறுவல்... தீவிர வேட்டையில் போலீஸார்!
திருவனந்தபுரம்: தமிழக - கேரள வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலால் போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். இதை தொடர்ந்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கேரளாவில் பாலக்காடு, வயநாடு ஆகிய பகுதிகளில் 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் பிரபாகரன், அருண்பாலன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட பாலக்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை ஜனவரி 6ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மாவோயிஸ்டுகள் என உறுதி செய்யப்பட்டுள்ளதால் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்களது வீடுகளில் கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன் மற்றும் சிடிக்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக, கேரள, கர்நாடக மாநில எல்லைப்புற வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த மாவோயிஸ்டுகள் எந்த நேரமும் தமிழகம் உள்பட 3 மாநிலங்களிலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு வனப்பகுதியோடு சேர்ந்துதான் தமிழநாடு மறறும் கர்நாடக வனப்பகுதியும் உள்ளது. இதனால்தான் இந்த பகுதியை தங்களுக்கு பாதுகாப்பான இடமாக அவர்கள் தேர்வு செய்துளளதாக தெரிகிறது. ஏதாவது ஒரு மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினால் இவர்கள் உடனடியாக வேறு பகுதிக்கு செல்ல இந்த வனப்பகுதி வசதியாக இருப்பதால்தான் அவர்கள் அங்கு பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.