போலியோ ஒழிப்புக்கு முட்டுக்கட்டைப் போடும் அரசியல், மதம்
டெல்லி: போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்திற்கு அரிசயல் மற்றும் மத சாயம் பூசப்படுவதால் உலகில் இருந்து போலியோவை ஒழிக்க முடியவில்லை.
ருக்சார் காத்தூன் என்ற சிறுமி தான் இந்தியாவில் கடைசியாக போலியோ வைரஸால் தாக்கப்பட்டவர். அவர் கடந்த 2011ம் ஆண்டு போலியோவால் தாக்கப்பட்டார். அதன் பிறகில் இருந்து இதுவரை இந்தியாவில் யாரையும் போலியோ தாக்கவில்லை. இதையடுத்து இந்தியா போலியோ இல்லாத நாடு என்று உலக சுகாதார அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.
இந்தியாவை போன்று அனைத்து நாடுகளிலும் போலியோவை ஒழிக்க முடியவில்லை.
போலியோ
போலியோ நோய் வைரஸால் ஏற்படுகிறது. போலியோ வைரஸ் தாக்கப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே அதன் அறிகுறிகள் தென்படுகிறது. போலியோவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்தாலும் 0.5 சதவீதம் பேர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். போலியோவை குணப்படுத்த மருந்து இல்லை எனினும் அது வராமல் தடுக்க மருந்துகள் உள்ளது.
தடுப்பூசி
போலியோ தடுப்பு மருந்து 1952ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பழக்கம் வந்ததும் சில ஆண்டுகளிலேயே பல நாடுகளில் அந்நோய் ஒழிக்கப்பட்டது.
இந்தியா
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டம் கடந்த 2010ம் ஆண்டில் தான் தீவிரப்படுத்தப்பட்டது. 2009ம் ஆண்டில் 741 பேரை போலியோ தாக்கியது. இந்த எண்ணிக்கை 2010ல் வெகுவாக குறைந்து 42 ஆனது. இதையடுத்து 2011ம் ஆண்டு ஒரேயொரு குழந்தை மட்டும் போலியோவால் பாதிக்கப்பட்டது. அதன் பிறகில் இருந்து இதுவரை யாருக்கும் போலியோ ஏற்படவில்லை.
நைஜீரியா
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியாவில் தான் போலியோ ஆண்டு முழுவதும் ஏற்படும் நோயாக கருதப்படுகிறது. 2003ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணத்தில் சில அரசியல் மற்றும் மத தலைவர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.
இஸ்லாம்
மேற்கத்திய நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக செய்யும் சதி தான் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது என்று நைஜீரியாவில் உள்ள சில அரசியல் மற்றும் மத தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்தனர். இதையடுத்து சொட்டு மருந்து கொடுக்க அஞ்சிய மக்கள் மருந்து கொடுத்தால் தான் போலியோவை கட்டுப்படுத்த முடியும் என்பதை பின்னர் தெரிந்து கொண்டனர்.
தாலிபான்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் ஆதிக்கமிக்க பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. முஸ்லீம் மக்களை குழந்தை பேரின்றி செய்ய மேற்கத்திய நாடுகள் செய்யும் சதியே போலியோ சொட்டு மருந்து என்று தாலிபான்கள் பிரச்சாரம் செய்தனர்.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்க இஸ்லாமிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் அல் கொய்தா தலைவர் ஒசாமாவை கண்டுபிடிக்க அமெரிக்கா போலியான தடுப்பூசி முகாமை நடத்தியது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்பவர்களை மக்கள் சந்தேகத்துடன் பார்த்து விரட்டுகிறார்கள். பாகிஸ்தானின் சில பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சென்றவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இலவசம்
போலியோ சொட்டு மருந்து இலவசமாக கொடுக்கப்படுவது நைஜீரிய மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி மருந்து இலவசமாக கிடைக்கும் என்கிறார்கள் மக்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை நைஜீரியாவிலோ, வேறு எந்த ஆப்பிரிக்க நாடுகளிலோ யாருக்கும் போலியோ ஏற்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால் 2017ல் ஆப்பிரிக்கா போலியோ இல்லா கண்டமாக அறிவிக்கப்படும்.
அரசு
2020ம் ஆண்டுக்குள் உலகில் இருந்து போலியோவை ஒழித்துவிடலாம் என்று நம்புகிறது உலக சுகாதார அமைப்பு. உலகில் இருந்து போலியோவை ஒழிக்க ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் போலியோவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு அந்நாட்டு அரசுகள் உள்நாட்டு அரிசயல் மற்றும் மத தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.