காஷ்மீர், ஜார்கண்ட்டில் இன்று 3-வது கட்ட தேர்தல்: தாக்குதல் பயத்தால் பாதுகாப்பு பலம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட்டில் இன்று 3வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், இன்று பத்காம், புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள 16 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 6 லட்சத்து 51 ஆயிரம் பெண்கள் உள்பட 13 லட்சத்து 59 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 1,781 ஒட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதில், பீர்வா தொகுதியில் தேசிய மாநாடு கட்சியின் செயல் தலைவரும், அம்மாநில முதல்வருமான உமர் அப்துல்லா போட்டியிடும் பீர்வா தொகுதியும் ஒன்று.
கடந்த தேர்தலில் உமர் அப்துல்லா தங்கள் குடும்ப செல்வாக்கு மிகுந்த கந்தர்பால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை அவர் தொகுதி மாறி பீர்வா தொகுதியில் நிற்கிறார். அந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்டு இருப்பதால், அவர் நம்பிக்கையுடன் அங்கு களம் இறங்கி இருக்கிறார்.
சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் கடந்த சில நாட்களாக காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பாதுகாப்பு படையினர் உள்பட 26 பேர் பலி உயிரிழந்துள்ளனர்.
எனவே, இன்றைய தேர்தலை தீவிரவாதிகள் சீர்குலைக்காத வகையில், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு செய்யப் பட்டுள்ளது.
ஜார்கண்ட் தேர்தல்:
இதேபோல் இன்று ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலிலும் 3-வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு, இன்று 17 தொகுதிகளில் ஒட்டுப்பதிவு நடந்து வருகிறது. இதில் மொத்தம் 26 பெண்கள் உள்பட 289 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இன்று தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, முன்னாள் சபாநாயகர் சிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.