ஜெ. வேண்டாம் என்று சொன்ன கொழும்பு கப்பல்- மத்திய அரசிடம் வேண்டும் என வலியுறுத்திய அதிமுக எம்பி!
டெல்லி: தமிழக அரசின் அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகள் பற்றி சரிவரத் தெரிந்து கொள்ளாமல், இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது பற்றி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அரசு கொள்கை முடிவாக இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்தை எதிர்த்து வருகிறது. ஆனால், இதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமல் அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசி மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று, கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.பி.,யான அன்வர் ராஜா, "இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, பயணிகள் கப்பல் போக்கு வரத்தை, மீண்டும் துவக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தூத்துக்குடி --கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தை துவங்க, இலங்கை அரசுடன் மத்திய அரசு கடந்த 2011ல் ஒப்பந்தம் போட்டது. ஆனால், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், ஆறு மாதத்திற்குள்ளாகவே கப்பல் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இதுதொடர்பாக, கடந்த மாதம் கூட மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், தமிழக அரசின் தலைமைச் செயலர் கடிதம் வாயிலாக 'கப்பல் போக்குவரத்து வேண்டாம்' என மீண்டும் வலியுறுத்தியிருந்தார்" என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணனின் முதல் பதிலிலேயே சுதாரிக்காத அன்வர் ராஜா மீண்டும் ஒரு கேள்வியை முன் வைத்தார். அதாவது, "இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சரக்கு கப்பல் போக்குவரத்தும் தற்போது இல்லை. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. தமிழக அரசுக்காக மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது அவசியம் இல்லையா?" என்றார்.
இக்கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணண், "தமிழக அரசிடம் இருந்து வந்த அதிகாரப்பூர்வ கடிதமே என் கையில் உள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை இலங்கையுடனான கப்பல் போக்குவரத்தை துவக்க தயாராகவே உள்ளோம். எனவே, இப்பிரச்னைகளில் தமிழக அரசு தான் ஒரு முடிவெடுத்து ஒத்துழைக்க வேண்டும். எங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை' எனத் தெரிவித்தார்.
அதிமுக அரசின் கொள்கை முடிவை எதிர்த்து, அன்வர் ராஜா இருமுறை ஒரே கேள்வியைக் கேட்டது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேள்வி நேரம் முடிந்தபின்னரே, மற்றவர்களால் பிரச்சினையின் வீரியம் அறிந்தார் அன்வர் ராஜா. எனவே, அன்வர் ராஜாவின் கேள்விகளை லோக்சபைக் குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக வட்டாரம் அணுகிப் பார்த்துள்ளது. ஆனால், அது இயலவில்லை என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்ற கடமைக்காக விஷய ஞானம் இல்லாத சிலர் எழுதித் தரும் கேள்விகளை எம்.பிக்கள் கேட்பதாலே இந்த அவலம் நேர்வதாக விசயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.