ராகுலைக் காணவில்லை... இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம்!
அலகாபாத்: விடுமுறையில் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எங்கே இருக்கிறார் என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், ராகுலின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப் படும் என அலகாபாத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளது பாஜக.
சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளால், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு வார விடுமுறையில் சென்றிருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள அனைத்து இந்திய காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் ராகுலைக் கட்சியின் தலைவராக நியமிக்க அக்கட்சித் தலைவர் சோனியா முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராகுல் ஓய்வில் சென்றிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க ஓய்வில் சென்றுள்ள ராகுல் தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது. முதலில் பாங்காங் செல்வதாகக் கூறிய ராகுல் பின்னர் உத்தரகாண்ட் சென்று தங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
ஆனால், அவை கடந்த 2008ம் ஆண்டு எடுக்கப் பட்டவை எனக் கூறிய காங்கிரஸ், ராகுலின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மவுனத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொது பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகின்ற வேளையில் காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல் இவ்வாறு ஓய்வில் சென்றிருப்பது அவரது பொறுப்பின்மையைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ளூர் பாஜக தலைவர்கள் சார்பில் போஸ்டர் ஒன்று அடித்து, அங்குள்ள சுவர்களில் ஒட்டப் பட்டுள்ளது. அதில், ராகுலின் பெரிய புகைப்படத்திற்கு கீழே, ‘காங்கிரஸ் தலைவரான இவரைக் காணவில்லை. இவர் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படும்' என எழுதப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சுவர்களிலும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.