சிந்து, கோஹ்லி அன் கோ ஜெயித்ததற்கு.. மோடிக்கு குவிந்த பாராட்டுகள்!
டெல்லி: இந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு மிகச் சிறந்த நாளாக அமைந்தது. ஒருபுறம், கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் வெற்றி. மற்றொரு புறம், பாட்மின்டனில் பி.வி.சிந்து கொரியா ஓபன் பட்டத்தை வென்றார்.
ஆனால், இதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டு குவிந்ததற்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் வருகிறதா.
முதலில், பிரதமர் மோடி நேற்று தனது, 67வது பிறந்த நாளைக் கொண்டாடினர். மறுபுறம், எந்த விளையாட்டாக இருந்தாலும், அது குறித்து, டுவிட்டரில் உடனடியாக பதில் அளித்தும், பாராட்டியும், ஆறுதல் அளித்தும் ஊக்குவிக்கிறார்.
சிந்துவின் அர்ப்பணிப்பு
கொரியா ஓபன் பட்டத்தை வென்ற சிந்து, இந்த பட்டத்தை, பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். பட்டம் வென்று, முகத்தில் உள்ள வேர்வையைக் கூட சிந்து துடைத்திருக்க மாட்டார். அதற்குள் மோடியிடம் இருந்து வாழ்த்து பறந்து வந்தது.
மழைக்கு நடுவே அசத்திய சென்னை
மற்றொரு புறம் சென்னையில் மழைக்கு நடுவே அபாரமாக விளையாடி வென்ற இந்திய அணியில், ஹார்திக் பாண்டியா, ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அசத்தினார்.
முக்கியமான குஜராத்திகள்
கேப்டன் கூல் டோணியுடன் இணைந்து, அணியின் வெற்றியை பாண்டியா உறுதி செய்தார். அதற்கு டுவிட்டரில் ஒருவர், `இந்தியாவின் மிகவும் முக்கியமான இரண்டு குஜராத்திகளில், பாண்டியாவும் ஒருவர்' என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் விலையை விட ஜாஸ்தி
மற்றொருவர், `பாண்டியாவின் ஸ்டிரைக் ரேட், பெட்ரோல் விலையை விட அதிகம். பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து' என்று கிண்டலாக பதிவு செய்திருந்தார். எது எப்படியோ, விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக வாழ்த்து கூறுவதற்காகவே, பிரதமர் மோடியை பாராட்டுவோம்!