களைகட்டிய லாலு – முலாயம் வீட்டு திருமணவிழா: பிரணாப், மோடி, சோனியா பங்கேற்பு
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் காரணம் முலாயம்சிங்கின் இளைய பேரன் தேஜ் பிரதாப்சிங் யாதவுக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜலட்சுமிக்கும் நேற்று டெல்லி அசோகா ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி, உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நீண்டநாட்களாக சந்திக்காமல் இருந்த பிரதமர் மோடியும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் ஒருவருக்கொருவர் அன்போடு பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
அரசியல் திருமணம்
பீகார் மாநிலம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் கடைசி மகள் ராஜலட்சுமியுடன், உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் பேரன் தேஜ்பிரதாப் சிங் யாதவின் திருமணம் நேற்று டெல்லியின் அசோகா ஓட்டலில் நடைபெற்றது.
மணமக்களுக்கு வாழ்த்து
இந்த இரு அரசியல் தலைவர்களின் குடும்பத்துத் திருமண உறவு, உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக பேசப்படும் நிகழ்வாக மாறிவிட்டது.
பிரணாப் - மோடி
இந்த மணவிழாவிற்கு கட்சி பேதமின்றி பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மூத்த அரசியல் தலைவர்கள், நாடுமுழுவதும் உள்ள அரசியல் கட்சித்தலைவர் பங்கேற்று சிறப்பு சேர்த்துள்ளனர். அரசியல்வேறு, நட்பு வேறு என்று இதன் மூலம் நிரூபித்துள்ளனர்.
எதிர் எதிர் வணக்கம்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ஒரே நேரத்தில் சந்தித்த போது எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் மரியாதையோடு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்.
அத்வானி - மன்மோகன்சிங்
இந்த நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி, , மன்மோகன் சிங், அத்வானி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் இந்த திருமணவிழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.
அரசியல் தலைவர்கள்
லாலுவின் பரமவைரியாக பார்க்கப்பட்டவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அவரும் இந்த திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ஜனதாதள தலைவர் சரத்யாதவ் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.
மோடியுடன் நிதிஷ்
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் மணமக்களை வாழ்த்தினார். அப்போது அங்கு இருந்த பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தார்.
நீண்டநாளுக்குப் பின்னர்
நிதிஷ்குமார் முன்பு பாஜக கூட்டணியில் இருந்தபோது, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு கட்சிகளின் உறவு முறிந்தது. அதன் பிறகு இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பிரசாரம் செய்து வந்தனர். மோடி பிரதமரான பின்பு அவரை நிதிஷ்குமார் சந்திக்கவில்லை.
தற்போது இருவரும் முதல் முறையாக முலாயம் பேரன் திருமண வரவேற்பில் சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
போஸ் கொடுத்த லாலு முலாயம்
வரவேற்புக்கு வந்த மோடியை முலாயம்சிங்கும், லல்லு பிரசாத்தும் வரவேற்று அழைத்து வந்தனர். மணமக்களை மோடி வாழ்த்தியபோது இருவரும் அருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
திலக் நிகழ்ச்சியில்
திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியான திலகம் இடும் விழா (திலக்) உத்தரப் பிரதேச மாநிலம் சைபையில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். விழா மேடையில் சம்பந்திகள் லாலு - முலாயம் இடையே அமர்ந்து நிகழ்ச்சிகளை மோடி அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை அரங்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அரசியல் கணக்கு
இந்த இரு அரசியல் தலைவர்களின் குடும்பத்துத் திருமண உறவு, உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரில் சில அரசியல் லாபக் கணக்குகளை அடிப்படையாகக்கொண்டே நடத்தப்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
வாக்கு வங்கி
பிஹாரில் அதிகமாக இருக்கும் யாதவர் சமூகத்தின் வாக்குகளை அங்கு போட்டியிடும் முலாயம் சிங் கட்சியினர் பிரித்துவிடுவதாகவும், இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் லாலுவின் கட்சியினருக்குப் பெருத்த இழப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
மன்னர் காலத்திலேயே
இந்த அரசியல் ஆதாயங்களுக்கான திருமணங்கள், முகலாயப் பேரரசக் குடும்பங்களிலும் இடம்பெறத் தவறவில்லை. இதில், அக்பர் செய்த ஒரு திருமணம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. முகலாயப் பேரரசரான அவர், ராஜபுதன வம்சத்தின் ஒரு பெண்ணை மணமுடித்தார். தாம் ஒரு இஸ்லாமியராக இருந்தும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்த அக்பரின் செயல் மதநல்லிணக்கத்தின் சான்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ராஜபுதனப் பகுதியை ஆள்வதற்கான அக்பரின் அரசியல் ஆதாயமும் இதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கிறது என்றும் விமர்சனங்கள் உண்டு. இதுபோன்ற ராஜதந்திர வரலாற்றின் தொடர்ச்சியாகவே லாலு-முலாயம் குடும்பத் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.