வலுவான லோக்பால் வரைவை நீர்த்து போகச் செய்துவிட்டாரே கேஜ்ரிவால்... பாயும் பிரசாந்த் பூஷண்
டெல்லி: வலுவான லோக்பால் வரைவை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நீர்த்து போகச் செய்துவிட்டதாக மாஜி 'ஆம் ஆத்மி' மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் சாடியுள்ளார்.
டெல்லியில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட தேர்வுக்குழு லோக்பால் கமிட்டியை உருவாக்கும்; இக் கமிட்டியிலிருந்து ஒருவரை நீக்கும் உரிமை சட்ட மன்றத்தில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி முடிவெடுக்கப்படும் என்பது கேஜ்ரிவாலின் லோக்பால் மசோதா.
இது வலுவற்ற லோக்சபா மசோதா என ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சாடியுள்ளார். டெல்லியை அடுத்த நொய்டாவில் இன்று செய்தியாளர்களிடம் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான வலுவான ஜன் லோக்பால் மசோதா அமைவதை அரவிந்த் கேஜ்ரிவால் விரும்பவில்லை. அண்ணா ஹசாரேவின் வலுவான லோக்பால் அம்சங்களை அவர் நீர்த்துப் போகச் செய்துவிட்டார்.
கேஜ்ரிவாலின் இந்நடவடிக்கை மிகப் பெரிய மோசடியாகும். இந்திய வரலாற்றில் யாரும் செய்யாத பெரும் மோசடியை செய்திருக்கிறார் கேஜ்ரிவால்.
அவரது நடவடிக்கையால் வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வராது.
இவ்வாறு பிரசாந்த் பூஷண் கூறினார்.