இயக்குநர் மதுர் பண்டார்கரை கொலை செய்ய முயன்ற வழக்கு: நடிகை பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன்
திரைப்பட இயக்குநரர் மதுர் பண்டார்கரை கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்ற வழக்கில் இந்தி நடிகை பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மும்பை: இயக்குநர் மதுர் பண்டார்கரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகை பிரீத்தி ஜெயின், அப்பீல் செய்ய அவகாசம் அளிக்கும் வகையில் 4 வாரங்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற சாந்தினி பார், டிராபிக் சிக்னல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மதுர் பண்டார்கர். 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆசை வார்த்தை கூறி தன்னை மதூர் பண்டார்சன் பல முறை கற்பழித்துவிட்டார் என இந்தி நடிகை பிரீத்தி ஜெயின் வழக்குத் தொடர்ந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குநர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய திட்டம் தீட்டி, கூலிப்படைக்கு முதற்கட்டமாக 75 ஆயிரம் ரூபாய் பணம் அளித்துள்ளார் பிரீத்தி ஜெயின். ஆனால், அவர்கள் இயக்குநரை கொலை செய்யாததால், தான் கொடுத்த பணத்தை நடிகை பிரீத்தி ஜெயின் திருப்பிக் கேட்டபோது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையறிந்த போலீசார், நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உ.பியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குநர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
நீதிபதி தீர்ப்பு வாசித்த உடனேயே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிரீத்தி ஜெயின் மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியதுடன், 4 வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.