வட்டமாகச் சப்பாத்தி சுடாததால் கர்ப்பிணி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்!
டெல்லியில் வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு டில்லியின் ஜகன்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன். 22 வயதான இவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இவர் தனது கணவருடன் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்காக 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
வட்டமாக வராத சப்பாத்தி
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிம்ரன் சப்பாத்தி செய்துள்ளார். வழக்கமாக சிம்ரனுக்கு சப்பாத்தி வட்டமாக வராதாம்.
தகராறு செய்த கணவன்
இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவும் சப்பாத்தி வட்டமாக இல்லை என சிம்ரனிடம் அவரது கணவர் சண்டை போட்டுள்ளார்.
காப்பாற்ற முயன்ற மகள்
மேலும் கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் வயிற்றிலேயே எட்டி உதைத்துள்ளார். இதில் வலி பொறுக்க முடியாமல் கதறிய சிம்ரனை, அவரது நான்கு வயது மகள் காப்பாற்ற முயன்றுள்ளார்.
வெறிதீர அடித்த கணவன்
அப்போது மகளையும் அடித்துத் துன்புறுத்திய சிம்ரனின் கணவர் அவரை இழுத்துச்சென்று தனியறையில் பூட்டியுள்ளார். பின்னர் மீண்டும் வந்து சிம்ரனை வெறித்தீர அடித்த அவர் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சகோதரர்
இதையடுத்து வீட்டிலிருந்து அவர் தப்பியோடிவிட்டார். காலை 4 மணியளவில் சிம்ரனின் சகோதரர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தை தனியறையில் பூட்டப்பட்டிருப்பதையும் தங்கை மயங்கிய நிலையில் கிடப்பதையும் கண்ட அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஏற்கனவே இறந்துவிட்டார்
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிம்ரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிம்ரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அப்பாதான் அடித்துக் கொன்றார்
காப்பாற்றப்பட்ட குழந்தையிடம் விசாரித்ததில் தனது தந்தைதான் தாயை அடித்துக் கொன்றதாக குழந்தை வாக்குமூலம் அளித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான சிம்ரனின் கணவரை தேடி வருகின்றனர்.
வேலைக்குப் போகச்சொன்ன ஆத்திரம்
தொழில் நஷ்டம் அடைந்ததால், தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும்படி கடந்த 2 ஆண்டுகளாக சிம்ரன் தனது கணவரை வற்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கோபத்தை மனதில் வைத்தே சிம்ரனை அவர் கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.