‘பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்’... கலாமின் கடைசி உரை அவரது புதிய புத்தகத்தில் இடம் பெறுகிறது!
கொல்கத்தா: மரணத்திற்கு முன்னதான அப்துல் கலாமின் கடைசி உரை அவரது புதிய புத்தகத்தில் இடம்பெற இருப்பதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) திங்கட்கிழமை மாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக அவர் தயார் செய்து வைத்திருந்த 4 ஆயிரம் வார்த்தைகளை கொண்ட உரையை முழுவதும் முடிக்காமலேயே அவர் காலமானார். தனது வார்த்தைகளால் இந்தியர்களுக்கு ஊக்க சக்தியாக மாறிய கலாமின் இந்த உரை அவரது புதிய புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது.
இது தொடர்பாக கலாமின் உதவியாளர் ஸ்ரீஜன் பால்சிங் கொல்கத்தாவில் கூறியதாவது:-
பூமியை வாழத்தகுந்த கிரகமாக்குவோம்...
இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் ‘பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்' என்ற தலைப்பில் அப்துல் கலாம் உரையாற்றினார். பேசத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
அதே தலைப்பில் புத்தகம்...
அதே தலைப்பில் அவர் புத்தகம் ஒன்றை எழுதி வந்தார். மாசுகளை அகற்றுதல், கழிவுப்பொருள் மேலாண்மை, நில மேலாண்மை, குடிநீர் பாதுகாப்பு, மறுசுழற்சி, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை கட்டிடங்கள், மாசற்ற எரிசக்தி போன்றவை பற்றி அந்த புத்தகத்தில் அவர் எழுத இருந்தார். இப்படி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது.
பாதி பகுதி நிறைவு...
அந்த புத்தகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். கிட்டத்தட்ட புத்தகத்தின் பாதி பகுதியை அப்துல் கலாம் எழுதி முடித்து விட்டார். இந்த புத்தகத்தில் இடம் பெறும் மேற்கண்ட விஷயங்கள் பற்றிதான் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருந்தார்.
கடைசி உரை...
அவரது உரை 4 ஆயிரம் வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. நிறைவு பெறாத அப்துல் கலாமின் புத்தகத்தில் அவரது இந்த கடைசி உரை இடம் பெறும்.
நடவடிக்கை...
இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவது தொடர்பாக எந்த பதிப்பகத்துடனும் அவர் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. என்றாலும் நாங்கள் ஆலோசனை நடத்தி இந்த புத்தகத்தை வெளியிட நடவடிக்கை எடுப்போம்.
வெளிவராத கட்டுரைகள்...
இதுதவிர, அப்துல் கலாம் எழுதி வெளிவராத கட்டுரைகள், கவிதைகள் இருந்தால் அவற்றையும் சேகரித்து வெளியிடுவோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அட்வான்டேஜ் இந்தியா...
ஏற்கனவே, அப்துல் கலாமுடன் இணைந்து இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கிறார் ஸ்ரீஜன். சமீபத்தில் ஸ்ரீஜன் பால்சிங்குடன் இணைந்து அப்துல் கலாம் ‘அட்வான்டேஜ் இந்தியா' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். இந்த புத்தகம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாக இருக்கிறது.