சிறந்த சுற்றுலா தலமாக தரங்கம்பாடி தேர்வு... குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பு
டெல்லி : சிறந்த சுற்றுலாத் தலமாக தமிழகத்தில் உள்ள தரங்கம்பாடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் சுற்றுலா துறையின் சாதனைகளை பாராட்டி தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில், மத்திய சுற்றுலாத் துறை 2013-14-ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதிற்கு, ‘சிறந்த குடிமை மேலாண்மையை பேணும் சுற்றுலாத்தலம்'என்ற வகையில் தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான விருதை தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான ரா.கண்ணன், சுற்றுலா ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனரான ஹர் சஹாய் மீனா ஆகியோரிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
சுற்றுலாத் துறையில் வளர்ச்சிக்கான விருது, மற்றும் சிறந்த ஊரக சுற்றுலா திட்டங்களுக்கான விருது குஜராத் அரசுக்கு வழங்கப்பட்டது.
கிளாஸ் எக்ஸ் பிரிவில் டெல்லி, கிரேட்டர் மும்பை, ஹைதரபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மிகச்சிறந்த விமான நிலையத்திற்கான விருது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
குறிப்பாக, சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற கட்டுமான வசதிகள், பராமரிப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பயன்பாடு, விமான நிலையத்தில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு சிறந்த வாகன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட 7 முக்கிய கூறுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.