92% கருணை மனுக்களை நிராகரித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
டெல்லி: தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களில் 92% மனுக்களை நிராகரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன், தமக்கு கருணை கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருணை மனு அளித்திருந்தார். ஆனால் அவரது கருணை மனுவை மீண்டும் மீண்டும் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனால் கடந்த மாதம் 30-ந் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.
4,802 கருணை மனுக்கள்..
நாடு விடுதலை அடைந்தது முதல் சுமார் 4,802 மரண தண்டனைக் கைதிகள் கருணை மனுக்களை ஜனாதிபதிகளுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதில் 3,238 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன; 1,564 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
72வது பிரிவு...
இந்திய அரசியல் சாசனத்தின் 72வது பிரிவு, தூக்கு தண்டனை கைதிகளுக்கு மனிப்பு வழங்குவது, தண்டனையை குறைப்பது என முடிவெடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளித்திருக்கிறது. அதுவும் ஏற்புடைய ஒரு காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிறது இந்த பிரிவு. இது தொடர்பாக இந்தியா ஸ்பென்ட் இணைய தளம் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்:
40 கருணை மனுக்களை நிராகரித்த ஆர்.வி
ஜனாதிபதியாக ஆர்.வெங்கட்ராமன் பதவி வகித்த காலத்தில் 40 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன; சங்கர் தயாள் சர்மா காலத்தில் 14 கருணை மனுக்கள் கொடுக்கப்பட்டு அதில் 10 நிராகரிக்கப்பட்டன.
நிராகரிக்காத கே.ஆர்.என்.
கே.ஆர். நாராயணன் ஜனாதிபதியாக இருந்த போது எந்த ஒரு கருணை மனுவும் நிராரிக்கப்படவில்லை; அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த ஒரு கருணை மனுநிராகரிக்கப்பட்டது.
பிரதீபா பாட்டீல்..
பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 22 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
24 பேரின் கருணை மனுவை நிராகரித்த பிரணாப்
ஆனால் ஜனாதிபதியாக பதவி வகித்துவரும் பிரணாப் முகர்ஜி 24 பேரின் கருணை மனுக்களை நிராகரித்திருக்கிறார். அதாவது தமக்கு வந்த கருணை மனுக்களில் 92% மனுக்களை அவர் நிராகரித்திருக்கிறார். இவ்வாறு இந்தியா ஸ்பென்ட் இணையதள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.