குடியரசுத் தலைவர் தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்!
டெல்லி: புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. இப்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(ஜூன் 14) தொடங்கியது. காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 28ம் தேதி. இந்தத் தேர்தலில் தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், டெல்லி மேல்சபை உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கலாம்.
35 வயது நிறைவு பெற்ற இந்தியர் யார் வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம். போட்டியிடுபவரின் வேட்புமனுவை, ஓட்டளிக்க தகுதியுடைய எம்.பி.,க்கள் அல்லது எம்.எல்.ஏ.,க்கள் 50 பேர் முன்மொழிய வேண்டும். மேலும் 50 பேர் வழிமொழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத்தாக்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகியுள்ளது. தேர்தல் அதிகாரி அனுப் மிஸ்ரா வேட்புமனு தாக்கல் குறித்து அறிவிக்கையினை வெளியிட்டுள்ளார்.