குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பதி வருகை.. ஏழுமலையான் தரிசனம்
ஹைதராபாத்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமையன்று திருப்பதி ஏழுமலையான் கோயில், அலமேலு மங்காபுரம் பத்மாவதி சுவாமி ஆலயத்திலும் சுவாமி தரிசனம் செய்தார். குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு திருப்பதி விமான நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அரசு மரபுப்படி ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்திற்கு செவ்வாய்கிழமை வந்தடைந்தார். திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காலை இங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் நரசிம்மன் ஆகியோரும் அவருடன் சென்றார்.
பத்மாவதி தாயார் தரிசனம்
காலையில் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில், மலையடிவாரமன அலிபிரியில் உள்ள கபிலதீர்த்தம் சிவன் (கபிலேஸ்வரர்) கோவிலிலும் தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் தரிசனம்
பிற்பகலில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அருகில் உள்ள லட்சுமிவராஹ சாமி கோயிலையும் அவர் தரிசித்தார்.
பாரம்பரிய வரவேற்பு
குடியரசுத்தலைவருக்கு திருப்பதி- திருமலா தேவஸ்தானத்தின் சார்பில் பாரம்பரிய சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. வேத பாராயணம் ஒலிக்க ஏழுமலையான் சன்னிதானத்துக்கு பூசாரிகள் அவரை அழைத்துச் என்றனர்.
திருப்பதி லட்டு
தரிசனத்துக்கு பின்னர் புனித பட்டு சால்வை, லட்டு பிரசாதம், ஏழுமலையான் படம், தீர்த்தம் ஆகியவற்றை அளித்தனர்.
தீவிர பாதுகாப்பு
குடியரசுத்தலைவரின் திருப்பதி வருகையையொட்டி நேற்று மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் வாகனங்களும் பழைய செக் போஸ்ட் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.