புதிய இந்தியாவை இணைந்து உருவாக்க வாருங்கள்.. சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் அழைப்பு!
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவராற்றிய முதல் சுதந்திர தின உரையில் இதுவாகும்:
நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயல்பட அழைப்புவிடுக்கிறேன். வரும் 2022ம் ஆண்டு, நமது நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவு பெறுகிறது.
அரசு கொள்கைகளின் பயன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைய, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மக்கள் ஆதரவு அளித்துள்னர். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்ட விவகாரம், நேர்மையான சமூகத்தை உருவாக்க, நாட்டிற்கு வலு சேர்த்துள்ளது.
ஜி.எஸ்.டி. சட்டத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தை அரசு செயல்படுத்தும்போது மக்களும் நாட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரத்தில் நாம் அண்டை வீட்டாருக்கு உதவ வேண்டும். அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, 1 கோடிக்கும் மேற்பட்டோர் தானாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
சட்டங்களை அரசு இயற்றினாலும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியது மக்கள்தான். பெண் குழந்தைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டாமல், சிறந்த கல்வி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.