நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன் நான்.. பிரிவு உபசார விழாவில் பிரணாப் முகர்ஜி உருக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன் தான் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிரிவு உபசார விழாவில் உருக்கமாக தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பிரிவு கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, பிரிவு உபசார விழாவில் எனக்கு பாராட்டு உரை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டேன். 48 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்திற்கு இந்த நாடாளுமன்றம் உரு கொடுத்ததது. இந்திரா காந்தி எனது வழிகாட்டியாக இருந்தார். வாஜ்பாய், நரசிம்ம ராவ் ஆகியோர் என் மனதை கவர்ந்தனர். அத்வானி போன்ற பல்வேறு மூத்த தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பிரதமர் மோடியுடனான நட்பு என்றும் மறக்க முடியாததாக இருக்கும். ஜி.எஸ்.டி நிறைவேற்றம் இந்த நாடாளுமன்றத்தின் சிறப்பு ஆகும். முக்கியமான காலக்கட்டங்களில் மட்டுமே நாட்டில் அவசர சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து மதத்தினரும் நாடாளுமன்றத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்களனும் நமக்கு முக்கியத்துவம் பெற்றவர் தான். விவாதங்கள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இருப்பினும் மனத்திருப்தியுடன் இந்த அவையிலிருந்து வெளியேறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.