டெல்லியில் திருமணமான பெண்ணை மிரட்டி 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பூசாரி
டெல்லி: டெல்லியில் 37 வயது திருமணமான பெண்ணை மிரட்டி 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ரோஹினி செக்டர் 7வது பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பாண்டே. கோவிலில் பூசாரியாக இருந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 37 வயது திருமணமான பெண் ஒருவர் தனது சொந்த பிரச்சனைக்கு தீர்வு கேட்டு பூசாரியை அணுகியுள்ளார். பிரச்சனைக்கு பரிகாரம் செய்கிறேன் என்ற பெயரில் ராஜேஷ் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்து அதை வைத்து மிரட்டியே அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இனியும் ராஜேஷின் கொடுமையை தாங்க முடியாது என்று முடிவு செய்த அந்த பெண் கடந்த வியாழக்கிழமை காவல் நிலையத்திற்கு சென்று பூசாரி மீது புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்தனர். அவரது செல்போன் மற்றும் சில கேட்ஜெட்களை போலீசார் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரு பூசாரி திருமணமான பெண்ணை 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்தது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.