குஜராத் கழுதைகளைக் பார்த்து பயப்படுகிறார் அகிலேஷ்... மோடி கிண்டல்!
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், குஜராத் கழுதைகளைக் கண்டு பயப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
லக்னோ: நாட்டு மக்களுக்காக தான் கழுதை போல் உழைப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 4-ம் கட்டத் தேர்தலுக்கான இறுதிக் கட்டப் பிரச்சாரம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது.
அப்போது பேசிய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், குஜராத் மாநில அரசு, கழுதைகளை அரியவகை படைப்பு போல, மிகைப்படுத்தி பேசுவதாகவும், குஜராத் கழுதைகளிடம் வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார்.
இந்நிலையில் இன்று 5-ம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தின்போது, பல்வேறு அரசியல் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது இயல்பானதுதான். அந்த வகையில் அகிலேஷ் யாதவ் என்னையும் பாஜகவையும் குறை கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அவர் கழுதைகளைப் பற்றி தாக்கி பேசி உள்ளது வேடிக்கையாக உள்ளது. அப்படியானால் அவர் கழுதைகளைப் பார்த்து பயப்படுகிறாரோ? அதுவும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத் கழுதைகளைப் பார்த்து பயம் ஏன்?
இந்த நாட்டு நாட்டு மக்களே எனது எஜமானர்கள். அவர்களுக்காக இரவு பகலாக உழைக்கும் திறனை கழுதைகளிடம் இருந்தே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். அகிலேஷ் யாதவ் தகுதி ஏற்ற வகையிலான வெறுப்புகளை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு மோடி தெரிவித்தார்.