தொடங்கியது "ஆசியாவின் இதயம்" மாநாடு.. அமிர்தரஸ் சென்றடைந்தார் மோடி
அமிர்தசரஸில் 2016-ம் ஆண்டுக்கான ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு இன்று தொடங்கியது.
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் 'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமிர்தரஸ் சென்றடைந்தார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 'ஆசியாவின் இதயம்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மாநாடு நடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடுகள் இந்த ஆசியாவின் இதயம் மாநாட்டில் பங்கேற்கும். ஆப்கானிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஆசியாவின் இதயம் மாநாடு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபறும் இந்த மாநாட்டில் ரஷியா, சீனா, துருக்கி உள்பட சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதர நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இன்று மாநாட்டில் கலந்து கொள்ள வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நடைபெறும் இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் கூட்டாக தலைமை ஏற்கின்றனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் அமிர்தரஸ் வந்தடைந்தனர். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர்.